Wednesday, August 27, 2014

அதான் நாகேஷ்...





சவுக்கு மரமும், வாழை மரமும்!

''எனக்குப் பொன்னாடை போர்த்தி, 'ஹாஸ்யச் சக்ரவர்த்தி' என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண சினிமா நடிகன். என்னை ஒட்டி இவ்வளவு பெரிய விழா எடுத்திருப்பது, ஒரு நாயின் முன் முழுத் தேங்காயைப் போட்டது போலத்தான். அந்த நாய் தேங்காயை உருட்டிக் கொண்டிருக்குமே தவிர, வேறொன்றும் செய்யாது; செய்யவும் முடியாது.
நான் இந்த மேடையில் நிற்பதனாலேயே உங்களைவிட உயர்ந்தவனாக ஆகிவிடமாட்டேன். குழந்தையைத் தகப்பன் தோள் மேல் தூக்கி வைத் திருக்கும்போது, தகப்பனைவிட குழந்தை உயர மாகத்தான் தெரியும். அதனாலேயே அந்தக் குழந்தை உயரமாக ஆகிவிடாது. அது போல ரசிகர்களாகிய நீங்கள் இல்லையேல் எனக்குப் பெருமை கிடையாது.
கோயில் திருப்பணிக்காக நடைபெறும் நாடகத்திற்குத் தலைமை தாங்க என்னை அழைத்தீர்கள். இது போல் கோயில் பணிகளுக்காக எத்தனை முறை அழைத்தாலும் வருவேன்.
ஆனால், இப்படிப்பட்ட பணிகளையெல்லாம் என்னை அழைக் காமல் நீங்களே செய்ய வேண்டும். நான் சாதாரண சினிமா நடிகன். என்னைத் திருச்சிக்கு வரவழைத்து, பிரபல ஹோட்டலில் ஏர்-கண்டிஷன் ரூமில் தங்க வைத்து, ஏராளமான போலீஸ் பந்தோபஸ்துகள் செய்து, இரவு திரும்பிப் போக முதல் வகுப்பிலோ, ஏர்- கண்டிஷன் வசதி உள்ள வகுப்பிலோ ஏற்பாடு செய்கிறீர்கள். எனக்கே இவ்வளவு ஆடம்பரங்களும் வசதிகளும் செய்யும் நீங்கள் சகல வல்லமையும் உடைய ஆண்டவனுக்கு இன்னும் எவ்வளவோ சிறப்பாகத் திருப்பணி வேலைகள் செய்வதுதான் சிறப்பு!
சவுக்கு மரங்களைச் சாரம் கட்டித்தான் புதுக் கட்டட வேலையைச் செய் வோம். வேலை முடிந் ததும் சவுக்கு மரங்களைத் தூரப் போட்டுவிட்டு, கட்டட வேலைகளில் எவ் விதப் பங்கும் பெறாத வாழை மரத்தைக் கொண்டு வந்து கட்டி, பூஜை செய்வோம். அது போல, இந்த ஆலயத் திருப்பணிக்காக இரவு பகலாகப் பாடுபட்டு உழைப்பவர்களுக்கு நன்றி கூற மறந்து, ஏதேதோ பேசிவிட்டேன்! அவர்களுக்கு என் நன்றி!''
(திருச்சி தில்லை நகரில் அருளானந்தர் கோயில் திருப்பணி நிதிக்காக நடந்த நாடக விழாவில், நாகேஷ் ஆற்றிய உரை )
( விகடன் - 29.03.1970 )